முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் கரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது: மருத்துவ வல்லுநர் குழு தகவல்

தமிழகத்தில் கரோனா பாதிப்பு தற்போது உச்சத்தில் உள்ளதாக முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனைக்குப் பிறகு மருத்துவ வல்லுநர் குழு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

Updated On : 15 ஜூன் 2020, 1:30 pm IST
பகிர்:

தமிழகத்தில் கரோனா பாதிப்பு தற்போது உச்சத்தில் உள்ளதாக முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனைக்குப் பிறகு மருத்துவ வல்லுநர் குழு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ வல்லுநர் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

கரோனா தொற்றுப் பரவல் தொடங்கிய பிறகு, இன்று ஐந்தாவது முறையாக தமிழக முதல்வர், மருத்துவ வல்லுநர் குழுவினருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்குப் பின்னர் மருத்துவ வல்லுநர் குழு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, தமிழகத்தில் கரோனா பாதிப்பு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. முன்பே, கரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டு பிறகு குறையும் என்று கூறியிருந்தோம். அதுபோல நடக்க உள்ளது. தற்போது உச்சத்தை தொட்டுள்ளதால், கரோனா பாதிப்பு இனி குறையத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளனர்.

கரோனா பாதிப்புக் குறையத் தொடங்கினாலும், மீண்டும் மூன்று மாதங்களுக்குப் பிறகு அது அதிகரிக்கத் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்றவற்றை முறையாக பின்பற்றினால் மட்டுமே கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

மேலும் அவர்கள் கூறியதாவது, தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதால், பொது முடக்கத்தை தீவிரப்படுத்த முதல்வரிடம் மருத்துவக் குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர். இது குறித்து தமிழக அரசு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட தற்போது ஆக்ஸிஜன் சிலிண்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிகமாக பரிசோதனை மேற்கொள்ளும் போது, பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஆனால், உயிரிழப்புகளைக் குறைக்க மேலும் அதிக அளவில் பரிசொதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அது மட்டும் அல்லாமல், காய்ச்சல், தொண்டை வலி போன்றவை ஒரே நாளில் இருந்து பிறகு சரியானாலும் அதுவும் கரோனா தொற்றின் அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஒரே நாளில் சரியாகிவிட்டதால் அது கரோனா இல்லை என்று பொதுமக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. தமிழகத்தில் தற்போது 75,000 படுக்கை வசதிகள் தயாராக உள்ளன என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.