திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் புதிய பேருந்து நிலையத்தைப் பழுது பார்த்து விரைவில் திறக்க ஏற்பாடு செய்வேன் என திமுக வேட்பாளர் பூண்டி கே.கலைவாணன் உறுதியளித்தார்.
திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் பூண்டி கே.கலைவாணன், கூத்தாநல்லூர் பெரிய பள்ளி வாயிலில் உதயசூரியன் சின்னத்துக்கு வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தார். பெரிய பள்ளிவாயிலில் ஜும்மா தொழுகைக்குப் பிறகு, பள்ளிவாயில் நிர்வாகிகள் மற்றும் தொழுகைக்கு வந்தவர்களிடம் பூண்டி கே. கலைவாணன் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் கூறியது.
கூத்தாநல்லூரை பெயரளவில் சின்ன சிங்கப்பூர் என அழைக்கப்படுவதை, உண்மையிலேயே சின்ன சிங்கப்பூராகவே மாற்றப்படும். பல ஆண்டுகளாக பயனற்று, பழுதடைந்த நிலையில் உள்ள, புதிய பேருந்து நிலையத்தைப் பழுது பார்த்து, புதுப்பித்து மீண்டும் சிறந்த முறையில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்.
சென்னை, தஞ்சை, திருச்சி உள்ளிட்ட அனைத்து ஊர்களுக்கு இங்கிருந்து புதிய பேருந்துகள் இயக்கப்படும். கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனை தரத்துடன் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். கூத்தாநல்லூர் நகரத்தை ஜொலிக்கும் சின்ன சிங்கப்பூராக மாற்றப்படும் எனத் தெரிவித்தார். வாக்கு சேகரிப்பின் போது, மனித நேய ஜனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் சீனி ஜெகபர் சாதிக், திமுக நகரச் செயலாளர் எஸ்.எம்.காதர் உசேன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் பலர் இருந்தனர்.