திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓய்வு எடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வெள்ளிக்கிழமை வந்துள்ளார்.
சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த மு.க.ஸ்டாலின், அங்கிருந்து கார் மூலம் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வழியாக கொடைக்கானல் வந்தடைந்தார்.
கொடைக்கானலிலிருந்து பாம்பார்புரம் செல்லும் வழியிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஸ்டாலின் தங்கியுள்ளார். அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் மற்றும் குழந்தைகள் உள்பட 20 பேர் கொடைக்கானல் வந்துள்ளனர்.
ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர், 3 நாள்கள் கொடைக்கானலில் ஓய்வு எடுக்க உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஸ்டாலின் தங்கியுள்ள தனியார் விடுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.