தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு வியாபாரி தீக்குளிக்க முயற்சி
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு வியாபாரி ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு வியாபாரி ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள கீழே தட்டப்பாறை சேர்ந்தவர் ஆனந்தன்(45). அந்த பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். மேலும் தனியார் வங்கியில் கடன் பெற்று லாரி வாங்கி வாடகைக்கு விட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் லாரியை சரியாக கவனிக்க முடியாததால் மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த ரேஷன் கடை ஊழியர் சுப்பிரமணியனிடம் விற்றுள்ளார்.
முதல் தவணையாக ரூ.50 ஆயிரம் மட்டும் செலுத்திய சுப்பிரமணியன் அதன் பிறகு பணம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக ஆனந்தன் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு குடும்பத்துடன் வந்த ஆனந்தன் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் ஆனந்தனை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.