சுரண்டையில் பிரபல துணிக்கடையில் தீ விபத்து; ரூ.12 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்
தென்காசி மாவட்டம், சுரண்டையில் சனிக்கிழமை நள்ளிரவில் பிரபல துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாயின.
சுரண்டை: தென்காசி மாவட்டம், சுரண்டையில் சனிக்கிழமை நள்ளிரவில் பிரபல துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாயின.
சுரண்டை - சங்கரன்கோவில் சாலையில் உள்ள பிரபல துணிக்கடையில் சனிக்கிழமை நள்ளிரவு 2 மணிக்கு தீ பிடித்துள்ளது. இதையடுத்து அங்கிருந்த இரவு காவலாளி சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து விரைந்து வந்த சுரண்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்கப் போராடினர். மேலும், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ஆலங்குளம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்தும் கூடுதல் தீயணைப்பு வண்டிகள் மற்றும் வீரர்கள் விரைந்து வந்து சுமார் 7 மணி நேரமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
4 தளங்கள் கொண்ட இந்த துணிக்கடையின் தரைத்தளத்தில் இருப்பு துணிகளும், முதல் தளத்தில் பெண்களுக்கான சேலைகளும், 2 ஆவது தளத்தில் சுடிதார் மற்றும் சிறுமியருக்கான பிரிவும், 3ஆவது தளத்தில் ஆண்களுக்கான துணிகளும் இருந்துள்ளது.
இந்த தீ விபத்தில் மொத்த துணிகளும் தீயில் எரிந்து நாசமாயின. இதன் மொத்த மதிப்பு 12 கோடி ஆகும். மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.