ஞாயிறு பொதுமுடக்கம்: வெறிச்சோடிய நாமக்கல் மாவட்டம்!
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கத்தால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது.
நாமக்கல்: கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கத்தால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது.
கரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் கட்ட அலை வேகமெடுத்துள்ளது. தமிழகத்தில் தினசரி ஆயிரக்கணக்கானோர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 20 ஆம் தேதி முதல் இரவு நேர பொதுமுடக்கம், ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் பொதுமுடக்கம் அமலானது. இதன் காரணமாக நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம், மோகனூர், சேந்தமங்கலம் என மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக கடைகள் திறக்கப்படவில்லை.
டாஸ்மாக் விற்பனை நிலையங்கள் இயங்கவில்லை. மருத்துவமனைகளும் ஒன்றிரண்டு மட்டுமே திறந்திருந்தன. பேருந்து, ஆட்டோ, வாடகை கார் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்தும் இயங்கவில்லை.
நாமக்கல்லின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஒரு சில இரு சக்கர வாகனங்கள் மட்டுமே சென்று வந்ததை காண முடிந்தது. அவர்களை தடுத்து நிறுத்தி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
தேவாலயங்களிலும்,தேநீர் கடைகள் மற்றும் உணவகங்கள் திறக்கப்படாத நிலையில் அம்மா உணவகங்கள் வழக்கம்போல இயங்கின. திங்கள்கிழமை அதிகாலை 4 மணி வரையில் இந்த முழுமுடக்கம் அமலில் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.