கூத்தாநல்லூர்: மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் திட்டத்திற்கான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் மத்திய அரசின் மாற்றுத்திறனாகளுக்கான அடையாள அட்டை வழங்கும் திட்டத்திற்கான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகளுக்காக மத்திய அரசின் ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ், நிலுவையில் உள்ள மற்றும் நிராகரிப்பு செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளை சேர்ப்பதற்கான முகாம், கூத்தாநல்லூர், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமிற்கு வட்டாட்சியர் என்.கவிதா தலைமை வகித்தார்.
மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளி நிறுவனரும், மேட்டுப்பாளையம் லயன்ஸ் சங்கத் தலைவருமான ப.முருகையன் முன்னிலை வகித்தார். முகாமை வட்டாட்சியர் என்.கவிதா தொடங்கி வைத்து பேசியது: திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் நடத்தப்படும் முகாமில், 55 கிராமத்திலும் உள்ள மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று உள்ளனர்.
கூத்தாநல்லூர் வட்டத்தில், வடபாதிமங்கலம் பிர்கா, கமலாபுரம் பிர்கா மற்றும் கூத்தாநல்லூர் பிர்கா உள்ளிட்ட 3 பிர்காவிலும், 55 கிராமங்களிலிருந்தும் 325 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பதிவு செய்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறன் கொண்டவர்கள். அவர்கள் அனைவரும் வணங்கக் கூடியவர்கள். போற்றப்பட வேண்டியவர்கள். மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த இந்த அடையாள அட்டை பெரும் பயனுள்ளதாகும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில அரசு பல்வேறு சலுகைகள் வழங்கி வருகிறது. இந்த அடையாள அட்டையைப் பெற்ற பிறகு, மத்திய அரசு வழங்கும் அனைத்து சலுகைகளையும் பெற்று பயனடையலாம் என்றார். முகாமில் மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலக கணினி தரவு உள்ளீட்டாளர் (டாடா என்ட்ரீ) ஆதித்யா, நடமாடும் பிசியோ தெரபி வாகன உதவியாளர் ராஜ கணேஷ், மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளியின் பயிற்சியாளர்கள் அனுராதா,பாபு, மேலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.