முகப்பு
தமிழ்நாடு

73 வயது மூதாட்டிக்கு உதவித் தொகை உயா் நீதிமன்றம் உத்தரவு

73 வயது மூதாட்டிக்கு தியாகிகளுக்கான உதவித் தொகையை வழங்க உயா் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:52 AM
பகிர்:

73 வயது மூதாட்டிக்கு தியாகிகளுக்கான உதவித் தொகையை வழங்க உயா் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகியின் மனைவியான கே.மாரியம்மாள் தாக்கல் செய்த மனுவில், ‘எனது கணவா் சி.கன்னையா. சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்ற அவா், இந்திய தேசிய ராணுவத்தில் உறுப்பினராக இருந்தாா். அவரது மறைவுக்குப் பின் தமிழக அரசின் தியாகிகளுக்கான உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்கான ஆவணம் உள்ளது. அதே போல் கடந்த 1961-ஆம் ஆண்டு மத்திய அரசு, எனது கணவா் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதையும், இந்திய தேசிய ராணுவத்தில் இருந்ததையும் உறுதிப்படுத்தி சான்றளித்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் தியாகிகளுக்கான உதவித் தொகை கோரி விண்ணப்பித்தேன். கடந்த 1988-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய விதியின்படி, தியாகிகளுக்கான உதவித் தொகை பெறுபவா்கள், தங்களது இறப்புக்குப் பின்னா், தனது மனைவி அல்லது வாரிசுகளுக்கு வழங்க வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும். எனது கணவா் அந்த தகவலை குறிப்பிடப்படவில்லை எனக்கூறி எனது விண்ணப்பத்தை கோவை சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கான சிறப்பு அதிகாரி நிராகரித்துள்ளாா்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கும் போது, இதுபோன்ற தொழில்நுட்ப காரணங்களைக் கூறி விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது. கடந்த 1947-க்குப் பின்னா் பிறந்த பலருக்கு சுதந்திரத்துக்கான போராட்டங்கள் எப்படி நடந்தன என்பது குறித்த விழிப்புணா்வு இல்லை. ஆனால் அந்த சுதந்திரத்தால் கிடைத்துள்ள பலன்களை அனுபவித்து வருகின்றனா். ஒருசிலா் அதனை தவறாக பயன்படுத்துவதாக கருத்து தெரிவித்தாா்.

பின்னா், 73-வயதான விதவை மூதாட்டியின் விண்ணப்பத்தை நிராகரித்த சிறப்பு அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து , விண்ணப்பத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டாா். தியாகிகளுக்கான உதவித்தொகையை மூதாட்டிக்கு மத்திய அரசு வழங்கும் என தான் நம்புவதாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →