மாணவர்களுக்கு உண்டியல், பரிசுத்தொகை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்
கல்வி தொலைக்காட்சி பார்க்கும் மாணவர்களுக்கு உண்டியல்கள் மற்றும் பரிசுத்தொகை வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் டம்பூர் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்.
தம்மம்பட்டி: சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஒன்றியம், கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் என்.டி.செல்வம், கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று கல்வி தொலைக்காட்சி பார்க்கும் மாணவர்களுக்கு உண்டியல்கள் மற்றும் பரிசுத்தொகை வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
மேலும் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தினசரி தவறாமல் பார்க்க ஆர்வமூட்டியும் சேமிப்புப் பழக்கத்தை இளம் வயது முதலே கடைபிடிக்கவும் அறிவுறுத்தி வருகிறார். மாணவர்களுக்கு முகமூடிகள் வழங்கியும் கரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதை பெற்றோர்கள் பாராட்டுகின்றனர்.
தலைமை ஆசிரியர் என்.டி.செல்வம் கடம்பூர் பகுதியில் 3 கிலோமீட்டர் தூரத்தில் தோட்டத்தில் வசிக்கும் மாணவர்களின் வீடுகளுக்கேச் சென்று பாடங்களை கற்றுத்தருவதையும் மாணவர்களை உற்சாகப்படுத்தி அவர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கி வருவதை பொதுமக்களும் பெற்றோர்களும் பாராட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
இதனால் கல்வியாண்டு தொடக்கத்தில் 75 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை, தற்போது 40 புதிய மாணவர்களின் சேர்க்கையுடன் 115 ஆக உயர்ந்துள்ளது.