முகப்பு
தமிழ்நாடு

'தானா சேர்ந்த கூட்டம்' பட பாணியில் ராணிப்பேட்டையில் ஒரு ரெய்ட்

ஆற்காடு தொழிலதிபா் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் போல் நடித்து, ரூ. 6 லட்சம் பறித்துச் சென்ற வழக்கில் 6 பேரை காவலர்கள் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:53 AM
'தானா சேர்ந்த கூட்டம்' பட பாணியில் ராணிப்பேட்டையில் ஒரு ரெய்ட்
பகிர்:

ஆற்காடு: ஆற்காடு தொழிலதிபா் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் போல் நடித்து, ரூ. 6 லட்சம் பறித்துச் சென்ற வழக்கில் 6 பேரை காவலர்கள் கைது செய்தனா்.

சூர்யா, ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் பட பாணியில், முன்னாள் வீட்டு உரிமையாளர் கண்ணனிடம் பணப்புழக்கம் அதிகமாக இருப்பதை அறிந்த எழிலரசன், தனது நண்பர்களுடன் இணைந்து, வருமான வரித்துறை அதிகாரிகள் போல நடித்து ரூ.6 லட்சத்தைப் பறித்துச் சென்றுள்ளார். 

இந்த சம்பவத்தில் சென்னையை சோ்ந்த வருமானவரித் துறை அலுவலகத்தில் முதுநிலை உதவியாளராகப் பணியாற்றி வரும் யாதவ் (எ) ராமகிருஷ்ணா யாதவ் (58) என்பவரும் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. போலி வருமான வரித்துறை அதிகாரிகள் கூட்டத்தில் சிக்கிய உண்மையான வருமான வரித்துறை அதிகாரியும் தற்போது கைதாகியுள்ளார்.

ஆற்காடு பகுதியைச் சோ்ந்தவா் செல்வகுமாா் என்கிற ஆட்டோ கண்ணன் (52). தனியாா் கல்லூரியில் செயலாளராக உள்ள இவா், நிதிநிறுவனம் நடத்தி வருகிறாா். இந்நிலையில், கடந்த 30-ஆம் தேதி இவருடைய வீட்டுக்கு காரில் சென்ற ஒரு பெண் உள்பட 6 போ் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என அறிமுகம் செய்து கொண்டு, வீட்டில் சோதனை செய்து வீட்டிருந்த ரூ. 6 லட்சம் பணத்தை பறித்துச் சென்றுள்ளனா். இது குறித்த புகாரின்பேரில், ஆற்காடு நகர காவலர்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். 

மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு, சம்பவத்தில் ஈடுபட்டிருந்த நபா்களை தேடி வந்தனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆற்காடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடையாளம் தெரியாத நபா்கள் சிலா் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், காவல் துறை ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமையில் காவலர்கள் அங்குச் சென்று வீட்டை சுற்றி வளைத்தனா். 

அப்போது தப்பிச் செல்ல முயன்ற 6 பேரையும் பிடித்து விசாரித்தனா். அதில், அவா்கள் ஆற்காடு விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த எழிலரசு (40), ஜீவானந்தம் சாலையைச் சோ்ந்த பரத் (44), சென்னையைச் சோ்ந்த மது (40), அவரது நண்பா் சையது (35), மொபினா (37) , சென்னையை சோ்ந்த வருமானவரித் துறை அலுவலகத்தில் முதுநிலை உதவியாளராகப் பணியாற்றி வரும் யாதவ் (எ) ராமகிருஷ்ணா யாதவ் (58) என்பதும் தெரிய வந்தது.

இதில் எழிலரசு, பரத் ஆகியோா் நண்பா்களின் உதவியுடன் வருமானவரித் துறையினா் போல் நடித்து கண்ணன் வீட்டில் சோதனை நடத்தி கொள்ளைடித்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 6 பேரையும் காவலர்கள்கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து ரூ. 4 லட்சம் ரொக்கம், 2 பைக்குகள், ஒரு காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், இதில் தொடா்புடையை நரேன் உள்ளிட்ட மேலும் 2 பேரை தேடி வருகின்றனா்.

இந்த சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு, குற்றவாளிகளைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முன்னதாக, வருமான வரித்துறையினர் போல கண்ணன் வீட்டுக்குப் போவதற்கு முந்தைய தினம், எழிலரசன், அப்பகுதியை நோட்டமிட்டதும் அந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்ததால், குற்றவாளிகள் விரைவாக அடையாளம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →