மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சி என்பது அதிக வருமானம் உள்ள பேரூராட்சியாக உள்ளது.
நாளுக்கு நாள் பேரூராட்சியின் எல்கையும் விரிவடைந்து வருகிறது.
மக்கள் தொகை எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து தற்போது 40 ஆயிரமாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மானாமதுரை பேருராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசிடமிருந்து பேரூராட்சி நிர்வாகத்திடம் கருத்துரு கேட்கப்பட்டது.
இதையடுத்து மானாமதுரை பேரூராட்சி நிர்வாகம் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்தது. அதன்பின் மானாமதுரை பேருராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாவதில் தாமத நிலை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் மானாமதுரை பேருராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாக வாய்ப்புளளதாக அனைத்துத் தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் வகையில் செவ்வாய்க்கிழமை தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழகத்தில் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்ட பேரூராட்சிகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இப்பட்டியலில் மானாமதுரை பேரூராட்சியும் இடம் பிடித்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் மானாமதுரை பகுதி மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது. மானாமதுரை பேருராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை முன்னிட்டு தற்போதைய வார்டுகளின் எண்ணிக்கையும் 18 லிருந்து 25 முதல் 28 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக மானாமதுரையை ஒட்டியுள்ள கல்குறிச்சி, மாங்குளம், கீழப்பசலை, கீழ்மேல்குடி ஆகிய ஊராட்சிகளிலிருந்து சில பகுதிகளை பிரித்து மானாமதுரை நகராட்சியுடன் இணைக்கும் திட்டம் உள்ளது. மேற்கண்ட ஊராட்சிகளிலிருந்து பிரிக்கப்படும் பகுதிகளும் ஏற்கனவே பேரூராட்சி சார்பில் கணக்கெடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மானாமதுரை பேரூரட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு இப்பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மானாமதுரைக்கு நகராட்சி அந்தஸ்திலேயே தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நகராட்சி அறிவிப்பின் மூலம் மானாமதுரை நகராட்சிக்கு அரசிடமிருந்து வளர்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்ற கூடுதல் நிதி கிடைக்கும். மேலும் அலுவலகப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களும் கூடுதலாக நியமனம் செய்யப்படுவார்கள். பேரூராட்சி சார்பில் பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் அனைத்து வரி இனங்களும் இனி கூடுதல் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.