தாமிரவருணி முதல் மடை பாசனத்தில் தண்ணீர் கிடைக்காததால் காய்ந்துபோன நெற்பயிர்கள்: ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்
வாகைக்குளம், மன்னார்கோவில் பகுதிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் பாசனத்திற்கு முறையாகத் தண்ணீர் கிடைக்காமல் நெற்பயிர்கள் கருகியதாக விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.
தமிழ்நாடுதாமிரவருணி முதல் மடை பாசனத்தில் தண்ணீர் கிடைக்காததால் காய்ந்துபோன நெற்பயிர்கள்: ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்
வாகைக்குளம், மன்னார்கோவில் பகுதிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் பாசனத்திற்கு முறையாகத் தண்ணீர் கிடைக்காமல் நெற்பயிர்கள் கருகியதாக விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வாகைக்குளம், மன்னார்கோவில் பகுதிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் பாசனத்திற்கு முறையாகத் தண்ணீர் கிடைக்காமல் நெற்பயிர்கள் கருகியதாக விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் அணை தாமிரவருணி பாசனத்தில் முதல் மடையாக உள்ளது வடக்குக் கோடை மேலழகியான் கால்வாய். இதன்மூலம் பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், கோடாரங்குளம், வாகைக்குளம், மன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இதில் வாகைக்குளம், மன்னார்கோவில் பகுதிகள் கடைமடைப் பகுதியாகும். இந்தப் பகுதியில் சீர்பாதக்குளம், ஞானப் பட்டர் குளம், புதுக்குளம், சுமைதாங்கிக்குளம் ஆகிய குளங்களின் மூலம் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பாபநாசம் அணையிலிருந்து கார் சாகுபடிக்கு 10 ஆண்டுகளாக ஜூன் 1 இல் தண்ணீர் திறக்காத நிலையில் இந்த ஆண்டு ஜூன் 1 இல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணையில் தண்ணீர் திறந்து சுமார் 80 நாட்களுக்கும் மேலான நிலையில் முதல் கால்வாயான வடக்குக் கோடை மேலழகியான் கால்வாயின் கடைமடைப்பகுதிக்குத் தண்ணீர் வரவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அந்தப் பகுதிகளில் இன்று ஆய்வு செய்தார். அவரிடம் விவசாயிகள் வடக்குக் கோடை மேலழகியான் கால்வாயில் கடைமடைப் பகுதியான வாகைக்குளம், மன்னார்கோவில் பகுதிக்கு 18 கி.மீ.தூரம் உள்ளது. இதில் கால்வாயின் குறுக்கே பல பாலங்கள் உள்ளது. பல ஊர்களையும் கடந்து வருகிறது. இதனால் பல இடங்களில் ஆக்கிரமிப்புகளாலும், கழிவுகள் கொட்டப்படுவதாலும் கடைமடை வரை தண்ணீர் முழுமையாக வருவதில்லை.
கால்வாயை பொதுப்பணித்துறை முறையாகப் பராமரிக்காததால் பல பாலங்களில் கழிவுகள் அடைத்து நீர்வரத்து தடுக்கப்படுகிறது. கால்வாயில் 54 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் 5 கனஅடி நீர் கூட கடைமடைப்பகுதிக்கு வருவதில்லை. மேலும் வயல்கள் வீட்டுமனைகள் ஆக்கப்பட்டு பாசனப்பரப்பு குறைந்த நிலையிலும் பாசனத்திற்குத் தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை. இரு போகம் விவசாயம் செய்த நிலையில் ஒரு போகம் விவசாயம் செய்வதற்கே போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. தண்ணீர் வராததால் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர் காய்ந்துவிட்டது. 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் கார் சாகுபடியில் விவசாயமே நடைபெறவில்லை என்று புகார் தெரிவித்தனர். மேலும், போர்க்கால அடிப்படையில் கால்வாயை முழுமையாத சீரமைத்து தண்ணீர் கிடைப்பதை உறுதிசெய்வதோடு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் விஷ்ணு விவசாயிகளிடம் உறுதியளித்தார். ஆய்வின் போது பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, வேளாண்துறை அதிகாரிகள், விவசாயிகள் உடனிருந்தனர்.