முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலர் வளையம் மரியாதை செலுத்தினர்.
இதையும் படிக்க- ஒற்றுமையுடன் இருந்தால் எதிரிகளை வெல்லலாம்: சசிகலா
அதிமுகவின் மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர். தொடர்ந்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் அதிமுக தொண்டர்கள் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். இதேபோல் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலாவும், அமமுக பொதுச்செயலர் டிடிவி. தினகரனும் அஞ்சலி செலுத்தினர்.
6 முறை தமிழக முதல்வராக பொறுப்புவகித்த ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.