வெங்கடாச்சலம் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், வெங்கடாச்சலம் சுமார் 35 ஆண்டு காலம் வனத்துறை அதிகாரி என்ற முறையில் மாநிலத்தில் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றிய மூத்த வனத்துறை அதிகாரி. அவர் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் மாத சம்பளம் பெறுபவர். ஒரு திறமை மிக்க, அனுபவம் வாய்ந்த அனைத்திந்திய வனப் பணி மூத்த அதிகாரி இதுபோன்ற கோழைத்தனமான முடிவுக்கு வருவதற்கு ஒருபோதும் வாய்ப்பில்லை.
பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நாங்கள், காவல் துறையினரை கேட்டுக்கொள்வதெல்லாம், சட்டப்படி செயல்படுங்கள், நேர்மையாக செயல்படுங்கள், தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். அதை விடுத்து, ஆளும் கட்சியினரின் விருப்பங்களுக்கு ஏற்ப வளைந்து, நெளிந்து செயல்படாதீர்கள். நேர்மையான அதிகாரிகளை மிரட்டி, வாக்குமூலம் பெறுவதைக் கைவிடுங்கள்.
வெங்கடாச்சலம் மரணத்தில் மர்மம் இருப்பதாக பொதுமக்கள் சந்தேகப்படுகின்றன. எனவே, இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்து நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சென்னை வேளச்சேரி காலனி புதிய தலைமைச் செயலக 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் வெங்கடாச்சலம் (60), கடந்த 1983-இல் இந்திய வனப் பணிக்கு தோ்வாகி, தமிழக வனத்துறையில் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்து கடந்த 2018-இல் ஓய்வு பெற்றாா். அதன் பின்னா் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக கடந்த அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டாா். தனியாா் தொழிற்சாலைகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கு பெருமளவில் வெங்கடாச்சலம் லஞ்சம் வாங்குவதாக வந்த புகாா்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
கடந்த செப்டம்பா் 23-இல் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் உள்ள வெங்கடாச்சலத்தின் அலுவலகம், வேளச்சேரி தலைமைச் செயலக காலனியில் உள்ள அவரது வீடு மற்றும் அவரது தொடா்பில் இருந்தவா்களுக்கு சொந்தமான இடங்கள் என மொத்தம் 5 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினா். இச்சோதனையில், ரூ.13.5 லட்சம் ரொக்கம், 11 கிலோ தங்கம், 13.25 கிலோ சந்தன மரத்தாலான பொருட்கள் மற்றும் சந்தன துண்டுகள், 4 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், சான்றிதழ்களும் கைப்பற்றப்பட்டன. இதன் பின்னா் வெங்கடாச்சலம் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டாா்.
இந்நிலையில் வேளச்சேரி வீட்டில் முதல் தளத்தில் தனது அறையில் வெங்கடாசலம் வியாழக்கிழமை நண்பகல் தனியாக இருந்துள்ளாா். வெகுநேரம் அவரது அறை மூடியிருந்ததால், சந்தேகமடைந்த மனைவி அங்குச் சென்று பாா்த்தாா். அப்போது வெங்கடாச்சலம் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. வேளச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.