முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் முதல் ஒமைக்ரான் உறுதி: அமைச்சர்

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

Updated On : 16 டிசம்பர், 2021 at 5:43 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:12 AM


சென்னை:  தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக தமிழகம் வந்த 47 வயது நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இதுதான் தமிழகத்தின் முதல் ஒமைக்ரான் பாதிப்பு. அந்த நபர் அறிகுறிகள் அற்றவராக இருக்கிறார். அவருக்கு சென்னை கிண்டி கரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் வந்த குடும்பத்தினர் 7 பேருக்கும் எடுக்கப்பட்ட மாதிரியிலும் மரபியல் மாற்றம் உள்ளது. அதனால் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 7 பேருமே இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை மேலும் கூறியது:    அந்த 47 வயது நபருடன் தோஹாவில் இருந்து பயணித்த வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கரோனா பாதிப்பு தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கும் வைரஸ் மரபியல் மாற்றம் கண்டறியப்பட்டுள்ளது. அவரது மாதிரியும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 41 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்றார் அவர். கர்நாடகம், ஆந்திரம், கேரளம் , தெலங்கானாவை தொடர்ந்து தமிழகத்திலும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் 10 மாநிலங்களில் இதுவரை 69 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.