மானாமதுரை அருகே வயல்களில் வைத்த விஷத்தை தின்று நூற்றுக்கணக்கான கோழிகள் பலி
மானாமதுரை அருகே நெற்பயிர்களை காப்பாற்ற வயல்களுக்குள் வைக்கப்பட்ட விஷத்தை தின்று நூற்றுக்கணக்கான கோழிகள் பலியாகின.
மானாமதுரை: மானாமதுரை அருகே நெற்பயிர்களை காப்பாற்ற வயல்களுக்குள் வைக்கப்பட்ட விஷத்தை தின்று நூற்றுக்கணக்கான கோழிகள் பலியாகின.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நெற் பயிர்களை காப்பாற்ற வயலுக்குள் வைக்கப்படும் விஷத்தைத் தின்று நூற்றுக்கணக்கான கோழிகள் உயிரிழந்துவிட்டதாக புகார் கூறப்படுகிறது. மானாமதுரை அருகே உள்ளது அன்னவாசல் கிராமம், இங்கு பல நூறு ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு நெற்கதிர்களில் நெல் மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் கோழி, காக்கை உள்ளிட்ட பறவைகள் வயலுக்குள் இறங்கி முளைத்து வரும் நெற்கதிர்களை தின்று சேதப்படுத்துவதால் வயல்களில் பறவைகளிடம் இருந்து நெற்பயிர்களை காப்பாற்ற கிராமத்தைச் சேர்ந்த சில விவசாயிகள் மட்டும் தங்களது வயல்களில் உணவில் விஷத்தை கலந்து வைத்து விடுகின்றனர்.
இவ்வாறு கடந்த சில நாள்களாக வயலுக்குள் சென்ற அன்னவாசல் கிராமத்தில் பொதுமக்கள் வளர்க்கும் கோழிகள் இந்த விஷத்தை தின்று இறந்து வருவதாக புகார் கூறப்படுகிறது. இவ்வாறு இதுவரை நூற்றுக்கணக்கான கோழிகள் இறந்து விட்டதாக பாதிக்கப்பட்ட கோழிகள் வளர்ப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழக்கும் கோழிகளை அவர்கள் ஒரே இடத்தில் குழி தோண்டி புதைத்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அரசுத் துறையினர் வயல்வெளிகளில் இதுபோன்று விஷத்தைத் தின்று கோழிகள் கொல்லப்படும் சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டுமென அன்னவாசல் கிராமத்தில் கோழிகள் வளர்ப்பவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.