கும்மிடிப்பூண்டி: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலமாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில் கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தேசிய ஊட்டச்சத்து வார ஒருநாள் புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் வழிகாட்டுதல்படி, கும்மிடிப்பூண்டி வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ஞானமணி தலைமையில் இந்த பயிற்சி கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது.
நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன் கலந்துகொண்டு பேசும்போது, ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்பு துறையினர் பொதுமக்களுக்கு அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு குழந்தை வளர்ச்சித் திட்டம் பற்றியும் செயல்பாடுகள் பற்றியும் பட விளக்க காட்சி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் சத்தான உணவு வகைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றியும் கண்காட்சியும் வைக்கப்பட்டது.
இதையும் படிக்க | ரூ.1 லட்சம் சம்பளத்தில் என்எல்சி நிறுவத்தில் கொட்டிக்கும் வேலைவாய்ப்புக்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?
இந்த பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சிக்கான பொருள்கள் வழங்கப்பட்டது .
இந்த நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் கி.வே. ஆனந்தகுமார் , மாவட்ட கவுன்சிலர்கள் சாரதம்மா முத்துசாமி, ராமஜெயம், ஊராட்சி மன்ற தலைவர்கள் கிழ்முதலம்பேடு கே.ஜி.நமச்சிவாயம், மாநெல்லூர் லாரன்ஸ், கண்ணன்கோட்டை கோவிந்தசாமி, தேர்வாய் முனிவேல், பனப்பாக்கம் கே. எஸ்.சீனிவாசன், குருவாட்டுச்சேரி கோமதி சேகர்,பெரிய ஓபுளாபுரம் செவ்வந்தி மனோஜ், பாதிரிவேடு என். டி. மூர்த்தி, கொள்ளானூர் துர்கா தேவி வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்ட முடிவில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் லில்லிகுமார் நன்றி கூறினார்.