செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நகரப்பகுதியில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் மற்றும் மலையடிவாரத்தில் தாழக்கோயில் அமைந்துள்ளது.
மலைக்கோயிலில் மூலவர் சுயம்பு மூர்த்தியாகவும் மலையடிவாரத்தில் தனி சந்நிதியில் திரிபுரசுந்தரி அம்பாளும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இங்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வடமாநிலம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த கோயிலை சனிக்கிழமை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். முன்னதாக மலைக் கோயிலுக்குச் சென்ற அமைச்சர் அங்கு பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தார். அதேபோல் தாழக்கோயிலையும் ஆய்வு செய்து ஊழியர்களிடம் பல்வேறு விஷயங்களை கேட்டு தெரிந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், '600 அடி உயரத்தில் அமைந்துள்ள மலைக்கோயிலுக்குச் செல்ல சுமார் 560 படிகளை ஏறிச் செல்ல வேண்டும். வாகனங்கள் மூலம் மலைமீது செல்ல பாதை வசதிகள் இல்லை. இதனால், வயது முதிர்ந்தோர் மற்றும் சிறுவர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல முடியவில்லை.
இதனால், வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலுக்கு ரோப் கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வு செய்த அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் தொழில்நுட்ப குழுவினர் ரோப் கார் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதா என்பது குறித்து அறிக்கையை அளித்துள்ளனர். இதுகுறித்து திட்டமதிப்பீடு செய்யப்பட்டு முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் பணிகள் துவங்கும்' எனத் தெரிவித்தார்.
கோயில் செயல் அலுவலர் குமரன், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.