திருச்சியில் அண்ணா நினைவு தினம்: கட்சியினர் மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 52ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள அண்ணா சிலைக்கு பல்வேறு கட்சியினர் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருச்சி: பேரறிஞர் அண்ணாவின் 52ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள அண்ணா சிலைக்கு பல்வேறு கட்சியினர் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுக: திராவிட முன்னேற்றக் கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து கலைஞர் அறிவாலயத்தில் அமைத்துள்ள அண்ணா திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் செளந்திரபாண்டியன், ஸ்டாலின் குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், வி.என். நகரில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலை வரை அமைதிப் பேரணியாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு, கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏ-வுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ், பகுதி செயலாளர் மதிவாணன், மற்றும் பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, கிளை கழக செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
இதேபோல, அதிமுக, அமமுக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.