முகப்பு
தமிழ்நாடு

உத்தரகண்ட் மாநிலத்துக்கு உதவத் தயார்: முதல்வர் பழனிசாமி

உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைந்து சரிந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்குச் சம்பவத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:29 PM
உத்தரகண்டில் வெள்ளப்பெருக்கு: முதல்வர் பழனிசாமி இரங்கல்
பகிர்:


சென்னை: உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைந்து சரிந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்குச் சம்பவத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் மிகப் பெரிய அளவில் பனிப்பாறை ஞாயிற்றுக்கிழமை உடைந்து சரிந்து திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் 153-க்கும் மேற்பட்டோா் நிலை குறித்துத் தெரியவில்லை; இதுவரை 10 சடலங்கள் மீட்கப்பட்டன; 27 போ் உயிருடன் மீட்கப்பட்டனா்.

இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைந்ததன் காரணமாக சமோலி மாவட்டத்தில் அலக்நந்தா மற்றும் தவுலிகங்கா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.  இந்த வெள்ளப் பெருக்கில் சுமார் பத்து நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

இந்த துயரச் செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு மக்களின் சார்பிலும், தமிழ்நாடு அரசின் சார்பிலும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உத்தரகண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.