உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சியாகாது: உயர் நீதிமன்றம் கருத்து
உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சியாகாது என கருத்து தெரிவித்த உயர்நீதிமன்றம், இலங்கை அகதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை: உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சியாகாது என கருத்து தெரிவித்த உயர்நீதிமன்றம், இலங்கை அகதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2013 -ஆம் ஆண்டு பூந்தமல்லியில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் உள்ள பி.சந்திரகுமார் உள்ளிட்ட சிலர், தொடர்ந்து 10 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சந்திரகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக இந்திய தண்டனை சட்டப்பிரிவு 309 இன் கீழ் தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பூந்தமல்லி இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சந்திரகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சியாகாது. தற்கொலை முயற்சி வழக்கில் ஓராண்டு தான் தண்டனை. ஆனால் இந்த வழக்கில் காவல்துறை ஓராண்டுக்குப் பின்னர் தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது தற்கொலை முயற்சியாகாது எனக் கருத்து தெரிவித்தார். பின்னர், சந்திரகுமாருக்கு எதிராக குற்றவியல் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.