பெரம்பலூர் அருகே தனியார் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து
பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் அருகே தனியார் சேமிப்புக் கிடங்கில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான பருத்தி மற்றும் மக்காச்சோளம் எரிந்து சேதமடைந்தன.
பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் அருகே தனியார் சேமிப்புக் கிடங்கில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான பருத்தி மற்றும் மக்காச்சோளம் எரிந்து சேதமடைந்தன.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாரணமங்கலம் கிராமம் அருகே, சிறுகன்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராமராஜ் (52) என்பவருக்குச் சொந்தமான பருத்தி மற்றும் மக்காச்சோள சேமிப்புக் கிடங்கு உள்ளது. இங்கு, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பருத்தி மற்றும் மக்காச்சோளம் ஆகியவற்றைத் தரம் பிரித்து, விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தக் கிடங்கில் புதன்கிழமை மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பருத்தி மற்றும் மக்காசளம் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், இந்த கிடங்கில் சுமார் ரூ. 10 கோடி மதிப்பிலான பருத்தி, மக்காச்சோளம் எரிந்து நாசமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இங்கு பணிபுரிந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து பாடாலூர் காவல்துறை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.