இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் உடல் நல்லடக்கம்: ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் உடல் டேவிட் பண்ணையில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன்(89) வெள்ளிக்கிழமை காலமானார். அவரது உடல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீழவெள்ளமலைபட்டியில் உள்ள அவருக்குச் சொந்தமான டேவிட் பண்ணையில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.
உடல்நலக் குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன்(89) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு காலமானார்.
சென்னை அண்ணாநகரில் தா. பாண்டியன் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் சனிக்கிழமை அவரது உடல் சொந்த ஊரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீழவெள்ள மலைப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
அவரது உடலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், சி.மகேந்திரன், பி.சேதுராமன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் சரவணன், புறநகர் மாவட்டச் செயலாளர் பா.காளிதாசன், உள்ளிட்ட அனைத்து கட்சியினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், மதுக்கூர் இராமலிங்கம், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா, ஆகியோர் தா.பா. உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
திமுக திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பா. சரவணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, தமுஎகச சார்பில் மாநில நிர்வாகி கருணாநிதி, கோடங்கி சிவமணி ஆகியோர் தா.பாண்டியனுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து கீழவெள்ளமலைபட்டியில் உள்ள அவருக்குச் சொந்தமான டேவிட் பண்ணையில் தோட்டத்தில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் அனைத்து கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.