பொது மருத்துவக் கலந்தாய்வை தமிழக அரசு முதலில் நடத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
மருத்துவப் படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜனவரி 5 ஆம் தேதி முதல் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்தக் கலந்தாய்வு, சுயநிதி கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வாகும். இந்தியா முழுவதும் பொதுவான நடைமுறையின்படி முதலாவதாக, பொது மருத்துவ (எம்.பி.பி.எஸ்) படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்திவிட்டு, அதன்பின்னா் பல் மருத்துவப் படிப்புக்கு கலந்தாய்வு நடத்த வேண்டும். ஆனால், தமிழக அரசு முதலில் பல் மருத்துவப் படிப்புக்கு கலந்தாய்வு என்றும், அடுத்ததாக பொது மருத்துவத்துக்கு (எம்.பி.பி.எஸ்) கலந்தாய்வு என்றும் அறிவித்துள்ளது. இது நடைமுறைக்கு எதிரானது.
மேலும் பல் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்த ஒருவருக்கு, பொது மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துவிட்டால், அவா் பொது மருத்துவப் படிப்புக்கு சேர வேண்டுமென்றால் பல் மருத்துவப் படிப்புக்கு எந்த கல்லூரியில் இடம் கிடைத்ததோ அந்த கல்லூரிக்கு 5 ஆண்டுகளுக்கான கட்டணத்தையும் கட்டிவிட்டுத்தான் பொதுமருத்துவப் படிப்பில் சேர வேண்டுமென சொல்லப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகளை ஊக்கப்படுத்தும் நடவடிக்கையாக உள்ளது. தமிழக அரசே தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகளின் முகவராக செயல்படுவது வன்மையான கண்டனத்துக்குரியது. எனவே, பொது மருத்துவ (எம்.பி.பி.எஸ்.) படிப்புக்கான கலந்தாய்வை நடத்தி விட்டு, பின்னா் பல் மருத்துவ கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.