தமிழ்நாடு

தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

DIN

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை காரணமாக அணைகளிலிருந்து நான்காவது நாளாக உபரி நீர் வெளியேற்றப்படுவதால், தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக வடகிழக்கு பருவ மழையால் தொடர் மழை பெய்து வருவதையடுத்து மேற்கு தொடர்ச்சி மலை  நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுவதை அடுத்து தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி அருகே வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதையடுத்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை இருப்பதையடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 142.15 அடியாகவும் அணையில் நீர்வரத்து 2465.63 கன அடியாகவும் நீர் வெளியேற்றம் 2360.18 கன அடியாகவும் இருந்தது. சேர்வலாறு அணையில் நீர் மட்டம் 141.73 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 117.50 அடியாகவும் அணையில் நீர்வரத்து 3161 கன அடியாகவும் நீர் வெளியேற்றம் 3149 கன அடியாகவும் உள்ளது.  மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணைகளிலிருந்து 5100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதையடுத்து தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

அம்பாசமுத்திரம் தாமிரவருணி கரையில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் மூழ்கியபடி வெள்ளநீர் செல்கிறது

மேலும் வயல்களில் உள்ள மழைநீர் தாமிரபரணியில் சேர்வதால் சுமார் 7 ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணியில் செல்கிறது. இதையடுத்து தாமிரபரணி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆறுகளில் குளிக்கவும் படங்கள் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம் வட்டத்திற்கு உட்பட்ட வைராவிகுளம், ஆலடியூர் பகுதியில் தாமிரபரணி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். 

தொடர்ந்து மழை நீடிப்பதையடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் தொடர்ந்து தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக விடிய விடிய மழை பெய்து வருவதையடுத்து மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும்  பாதிக்கப்பட்டுள்ளது.வருவாய் துறையினர், உள்ளாட்சித் துறையினர், காவல் துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள கடனாநதி அணையின் நீர்மட்டம் 83 அடியாகவும் நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் 254 கன அடியாகவும் உள்ளது. ராமநதி அணையில் நீர்மட்டம் 83 அடியாகவும் நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் 30 கன அடியாகவும் உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT