சென்னை மெரீனாவில் குவிந்த அதிமுக தொண்டர்கள்!
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிட திறப்பையொட்டி, அதிமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் சென்னை மெரீனாவில் குவிந்துள்ளனர்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிட திறப்பையொட்டி, அதிமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் சென்னை மெரீனாவில் குவிந்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரீனாவில் 50,422 சதுர அடி பரப்பளவில் ரூ.80 கோடி செலவில் நினைவிடம் கட்டப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், பணிகள் நிறைவடைந்து இன்று(ஜன.27) நினைவிடம் திறக்கப்பட்டது.
முன்னதாக ஜெயலலிதா நினைவிடத்துக்கான கல்வெட்டினை திறந்துவைத்த முதல்வர் பழனிசாமி, பின்னர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறந்துவைத்தார். துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் உடன் இருந்தனர். தொடர்ந்து, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
ஜெயலலிதா நினைவிடம் திறப்பையொட்டி சென்னை மெரீனாவில் அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். காவல்துறையினர் ஆயிரக்கணக்கானோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுளள்னர். சென்னை மெரீனா மற்றும் சுற்றுப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கரோனா அச்சத்தையும் மீறி, தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.