விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகை சமரச சுத்த சன்மார்க்க சத்திய அறக்கட்டளை சார்பில் 80-ஆம் ஆண்டு ஜோதி தரிசன விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
திருஅருட்பிரகாச வள்ளலார் துவக்கி அருளிய 150ஆவது ஆண்டு பொன்விழா தைப்பூச ஜோதி தரிசனம் வியாழக்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகையில் எண்பதாம் ஆண்டு ஜோதி தரிசன பெருவிழா காலை 5 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி தீபம் ஏற்றி வழிபாடுகளுடன் தொடங்கியது.
காலை 6 மணிக்கு முதல் கால தரிசனம் ஏழு திரைகள் நீக்கி ஜோதி வழிபாடு நடைபெற்றது. இதனையடுத்து காலை 10 மணிக்கு ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது.
முன்னதாக காலை 7 மணிக்கு கொடியேற்றமும், காலை 10 மணிக்கு சுத்த சன்மார்க்க கருத்தரங்கம் நடைபெற்றது.
தொடர்ந்து பகல் ஒருமணிக்கு ஜோதி வழிபாடு, இரவு 7 மணிக்கு ஜோதி வழிபாடு, வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு ஜோதி வழிபாடு வழிபாடும் என ஆறுகால ஜோதி வழிபாடு நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தைப்பூச ஜோதி தரிசனம் செய்தனர்.
ஏழை மக்கள், மாணவர்கள் உள்ளிட்ட 3000 பேருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்குகின்றனர். சன்மார்க்க அறக்கட்டளை மேலாளர் அண்ணாமலை தலைமையில் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.