முகப்பு
தமிழ்நாடு

அய்யாறு வாண்டையார் மறைவு: அதிமுக இரங்கல்

தஞ்சாவூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பூண்டி கி. அய்யாறு வாண்டையார் (86) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

தஞ்சாவூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பூண்டி கி. அய்யாறு வாண்டையார் (86) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார்.

இவர், கடந்த மே மாதம் உடல் நலக்குறைவால் மறைந்த பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி முன்னாள் செயலர் - தாளாளர், முன்னாள் மக்களவை உறுப்பினருமான கி. துளசிஅய்யா வாண்டையாரின் இளைய சகோதரர்.

காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பிரமுகராக இருந்த இவர் தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 1984- ஆம் ஆண்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதையடுத்து காங்கிரஸிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த இவர் 2001-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திருவையாறு தொகுதியில் (தஞ்சாவூர் மாவட்டம்) போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது, 23 நாள்கள் அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். தொடர்ந்து 2006-ஆம் ஆண்டு வரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். மேலும் தஞ்சாவூர் வங்கி இயக்குநராகவும், பல்வேறு கிளப்களில் கௌரவ பொறுப்பிலும் இருந்தவர்.

இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மருத்துவமனையில் காலமானார்.

இவரது உடல் ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூருக்கு கொண்டுவரப்பட்டு பூண்டி கிராமத்தில் மாலையில் இறுதிச்சடங்கு செய்யப்பட உள்ளது.

இவரது மனைவி ராஜலட்சுமி அம்மாள் 2013 ஆம் ஆண்டில் காலமானார். மகன் தனசேகர வாண்டையார், மகள் பொன்னம்மாள் உள்ளனர்.

அதிமுக இரங்கல்

அய்யாறு வாண்டையார் மறைவுக்கு அதிமுக இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது. 

'வாண்டையார் மறைவு செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும் மிகுந்த வேதனையும் அடைந்தோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அன்பைப் பெற்றவரும் பாரம்பரிய மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவருமான அய்யாறு வாண்டையாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்' என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →