இரு குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை
கொடுமுடி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக 2 குழந்தைகளை விஷ மாத்திரை கொடுத்து கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு: கொடுமுடி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக 2 குழந்தைகளை விஷ மாத்திரை கொடுத்து கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகில் வீரப்பகவுண்டன்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபுசங்கர்(40). விவசாயி. இவரது மனைவி சசிகலா(33). இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு மீண்டும் கணவன் மனைவிக்கிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதில் மனவேதனையடைந்த சசிகலா வாழைப்பழத்தில் விஷ மாத்திரையை வைத்து தனது மகனுக்கும், மகளுக்கும் கொடுத்து தானும் சாப்பிட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை அதிகாலை மனைவி, குழந்தைகள் இருவரும் மயக்கமடைந்து இருப்பதைப் பார்த்த பிரபுசங்கர் 3 பேரையும் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். எனினும் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை அதிகாலை சசிகலா மற்றும் குழந்தைகள் இருவரும் இறந்துவிட்டனர்.
தகவலறிந்த பெருந்துறை டி.எஸ்.பி. செல்வராஜ், மலையம்பாளையம் காவல் ஆய்வாளர் ஜீவானந்தம் ஆகியோர் மூவர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பிரபுசங்கரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.