இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளக் கூடாது : உயர்நீதிமன்றம்
இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளக்கூடாது என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை: இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளக்கூடாது என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் படூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பழைய மாமல்லபுரம் சாலை இரண்டாவது திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகம், செங்கல்பட்டு மாவட்டம், படூர் கிராமத்தில் உள்ள கல்லேரி எனும் ஏரியை மணல் மூலம் நிரப்பி வருகிறது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்த ஆக்கிரமிப்பு குறித்து விசாரணை நடத்த வட்டாட்சியருக்கு, வருவாய் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
அந்த விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீர் நிலைகளை அரசு ஆக்கிரமிக்கக் கூடாது. நீர் நிலைகளை நிரப்பி சாலை அமைப்பதற்கு பதிலாக மேல்நிலை சாலை அமைக்கலாம். இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தினர். பின்னர், மனு தொடர்பாக தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.