கடலூரில் 5 மணி நேரமாக நீடிக்கும் சாலை மறியல்
சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி கடலூர் தேவனாம்பட்டினத்தில் மீனவர்கள் திங்கள்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
கடலூர்: சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி கடலூர் தேவனாம்பட்டினத்தில் மீனவர்கள் திங்கள்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.
அவர்களை போலீசார் சென்னை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் நகராட்சி பூங்கா அருகில் மறித்ததும் அவர்கள் மதியம் 1 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவல் கண்காணிப்பாளர், கோட்டாட்சியர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. சுருக்குமடி வலைக்கு அனுமதி தந்தால் மட்டுமே போராட்டம் வாபஸ் வாங்கப்படும் என்று தெரிவித்து மறியலை கைவிட மறுத்தனர். இதனால், 5 மணி நேரத்திற்கும் மேலாக மறியல் தொடர்ந்தது. இதனால், மாற்று வழியில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.
இதற்கிடையில், சாப்பிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சகுந்தலா என்ற 70 வயது பெண் மயக்கம் அடைந்தார். அவருக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடலில் இறங்கி போராட்டம்:
இதே கோரிக்கையை வலியுறுத்தி கடலூர் அருகே உள்ள ராசாப்பேட்டையில் சுமார் 150 மீனவர்கள் கடலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.