மானாமதுரை மாயாண்டி சுவாமிகள் மடத்தில் நடிகர் செந்தில் தரிசனம்
மானாமதுரை அருகே கட்டிக்குளம் கிராமத்தில் உள்ள சித்தர் மாயாண்டி சுவாமிகள் அவதார விழாவில் திரைப்பட காமெடி நடிகர் செந்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கட்டிக்குளம் கிராமத்தில் உள்ள சித்தர் மாயாண்டி சுவாமிகள் அவதார விழாவில் திரைப்பட காமெடி நடிகர் செந்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் சித்தர் மாயாண்டி சுவாமிகளின் 164 வது அவதார விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திரைப்பட நடிகர் செந்தில் கருப்பனேந்தல் மடத்துக்கு வந்தார். மடத்தின் நிர்வாகிகள் அவரை வரவேற்றனர்.
அதைத்தொடர்ந்து நடிகர் செந்தில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு மாயாண்டி சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு குறித்து கருப்பனேந்தல் மடத்தின் நிர்வாகிகள் விளக்கிக் கூறினர்.
பின்னர் மடத்தில் நடந்த அன்னதானத்தில் செந்தில் பங்கேற்றார். அதன்பின் அவர் கூறுகையில், சித்தர் மாயாண்டி சுவாமிகளின் சிறப்புகள் குறித்து அறிந்தேன். மடத்திற்கு வந்து சுவாமியை தரிசனம் செய்ய வேண்டுமென்று பல நாள்களாக எண்ணியிருந்தேன். தற்போது அந்த ஆசை நிறைவேறியுள்ளது. கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு வந்து மாயாண்டி சுவாமியை தரிசனம் செய்து அன்னதானம் சாப்பிட்டது மனதுக்கு சந்தோஷமாக உள்ளது என்றார்.