முகப்பு
தமிழ்நாடு

பயங்கரவாத ஊடுருவலை தடுக்க வேண்டும்: தமிழ்நாடு இந்து முன்னணி மாநில தலைவர்

தமிழகம், புதுவையில் பயங்கரவாத ஊடுருவலை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பயங்கரவாத ஊடுருவலை தடுக்க வேண்டும்: தமிழ்நாடு இந்து முன்னணி மாநில தலைவர்
பகிர்:

புதுச்சேரி: தமிழகம், புதுவையில் பயங்கரவாத ஊடுருவலை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி காமராஜர் சாலை ஜெயராம் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இந்து முன்னணி சார்பில் மாநில அளவிலான சிறப்பு செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 

இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இந்து முன்னணித் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, தமிழ்நாடு மாநில இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து இந்துக் கோவில்களில் உள்ள விளை நிலங்கள் மற்றும் நிலங்கள் அந்தந்த கோயில்களுக்கு உரியது.  அதனை வைத்து கோவில் புனரமைப்பு மற்றும் குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில்களில் நிலங்களை அரசு உடனடியாக மீட்க வேண்டும்.  எந்த அரசியல் கட்சியினராக இருந்தாலும், அவர்களின் பெயரை வெளியிட்டு அதனை மீட்க வேண்டும்.  ஸ்டென்சாமி ஒரு நக்சலைட். அவர் இறப்பிற்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி உள்ளார். இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

கோவை, திருப்பூர் பகுதிகளில் தற்போது அதிக அளவில் வடமாநில மற்றும் பயங்கரவாதிகள் குடியேறி வருகின்றனர். தமிழகம், புதுவையில் பங்களாதேஷ் பகுதியிலிருந்து சட்டவிரோதமாக பலரும் ஊடுருவியுள்ளனர். இந்த வகையில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை கண்டறிய சிறப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள கோவில் நிலங்களை உடனடியாக மீட்க வேண்டும். தமிழகத்தில் மதக்கலவரங்களை நடத்த பல்வேறு கட்சிகள் திட்டமிட்டு வருவதை தடுக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் வைக்கப்பட உள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட போதகர் சார்ஜ் பொன்னையா மதம் சார்ந்த பல்வேறு தவறான தகவல்களை வெளியிட்டதால் அவரை கைது செய்துள்ளனர். அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →