திருப்பூர்: தமிழகத்தில் மதுக்கடைகளைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் பாஜகவினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் வரும் திங்கள்கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் ஓடக்காட்டில் உள்ள பாஜக அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்டத் தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்தார்.
இதில், பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் கேசிஎம்பி சீனிவாசன், மாவட்டச் செயலாளர் கார்த்தி, ராயுபரம் மண்டல் தலைவர் மூர்த்தி, பொதுச்செயலாளர் பூபதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.