சாத்தூர் அருகே சட்ட விரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டபோது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு சிறுவன், கர்ப்பிணி பெண் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்த நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த தாயில்பட்டி அருகே உள்ள கலைஞர் காலனியைச் சேர்ந்தவர் சூர்யா(25). இவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை பட்டாசு தயாரிப்பின் போது உராய்வு ஏற்பட்டதால் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் அருகருகே இருந்த 5க்கும் மேற்பட்ட வீடுகளும் சேதமடைந்தன. இந்த வெடி விபத்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த வெம்பக்கோட்டை, சாத்தூர், சிவகாசி ஆகிய பகுதியிலிருந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து மீட்டு பணியில் ஈடுபட்டனர்.
இந்த வெடி விபத்தில் சிக்கி கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்த செல்வமணி(35), 4 மாத கர்ப்பிணி பெண்ணான கற்பகம்(31), ரபியாசல்மான்(5) சிறுவன் ஆகிய மூவரும் உடல் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
மேலும், இந்த வெடி விபத்தில் சூர்யா(25), சோலையம்மாள்(49) ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.