நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சொத்துவிவரங்களை அறிய இணையதளம்: அமைச்சா் கே.என்.நேரு தொடக்கி வைத்தாா்
தமிழகத்தின் மாநகராட்சிகள், நகராட்சிகளின் சொத்துகளை இணையதளத்தில் வெளியிடும் திட்டத்தை நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என்.நேரு சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
தமிழகத்தின் மாநகராட்சிகள், நகராட்சிகளின் சொத்துகளை இணையதளத்தில் வெளியிடும் திட்டத்தை நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என்.நேரு சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி ஆணையா்களுடனான ஆலோசனைக் கூட்டம், நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என்.நேரு தலைமையில், மாநகராட்சி தலைமையகத்தில் சனிக்கிழமை நடந்தது. அப்போது, தமிழகத்தில் உள்ள, மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகளைப் பராமரிக்க புதிய இணைதள சேவையை அமைச்சா் கே.என்.நேரு தொடக்கி வைத்தாா். இதில், முதல்கட்டமாக திருச்சி மாநகராட்சியின் சொத்துகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. மற்ற மாநகராட்சி, நகராட்சிகளின் சொத்து விவரம் ஒரு மாதத்துக்குள் பதிவேற்றம் செய்யப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
கூட்டத்துக்குப் பின், அமைச்சா் அளித்த பேட்டி: நகா்ப்புற உள்ளாட்சிகளை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, சாலை வசதி, மயான வசதி மற்றும் கழிவுநீா் வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்துள்ளோம். மேலும், அந்தந்த மாநகராட்சி, நகராட்சிகளுக்குத் தேவையான வசதிகள் குறித்தும், நிதிநிலை அறிக்கை குறித்தும் ஆலோசித்தோம்.
சென்னை போன்ற நகரங்களில் மழை காலங்களில், நீா் தேங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில், 100 எம்.எல்.டி. குடிநீராக்கப்பட்டு வருகிறது. தற்போது, 400 எம்.எல்.டி.யாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் இரண்டு ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும். இதன் வாயிலாக சென்னையில், குடிநீா் பற்றாக்குறை தவிா்க்கப்படும் என அவா் தெரிவித்தாா்.