முகப்பு
தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கம்யூனிஸ்டுகள், விசிக நாளை முதல் 3 நாள்களுக்கு ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கம்யூனிஸ்டுகள், விசிக ஆகிய கட்சிகள் நாளை முதல் 3 நாள்களுக்கு ஆர்ப்பாட்டம்  நடத்த உள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
பகிர்:

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கம்யூனிஸ்டுகள், விசிக ஆகிய கட்சிகள் நாளை முதல் 3 நாள்களுக்கு ஆர்ப்பாட்டம்  நடத்த உள்ளன.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் இரா.முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், ஆகியோர் இன்று கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலைகள் தினந்தோறும் உயர்த்தப்படுகின்றன. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் சுயேட்சையாக விலைகளை நிர்ணயம் செய்கிறது என பாஜக மோடி அரசு பாசாங்கு காட்டி வருகிறது.

கரோனா நோய்த்தொற்று பரவல் தொடங்கிய ஆரம்பகாலத்தில், அதனை  தடுக்கும் நடவடிக்கையை தொடங்காமல் அரசியல் ஆதாயம் தேடிய ஆர்.எஸ்.எஸ். மற்றும்  பாஜக மோடி அரசு, அந்தக் கொடிய நோய்த்தொற்று பரவலைக் காரணமாக்கி, கார்ப்ரேட் நிறுவனங்களின் கொள்ளை லாப  சுயநல வெறிக்கு ஆதரவாகவ செயல்பட்டு வருகின்றன. இதன் காரணாமக பெட்ரோல், டீசல் விலை லிட்டர் ரூ. 100/-ஐ தாண்டியிருக்கிறது. இது மேலும் ரூ. 125/- வரை அதிகரிக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். மக்கள் நலன் சார்ந்த கொள்கை அணுகுமுறையால்  பெட்ரோல்,  டீசல் லிட்டர் முறையே ரூ. 50/- மற்றும் ரூ. 40/-க்கு விற்க முடியும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை பரவல் தீவிரமாகி, மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாம் அலை உருவாகி மேலும் படுமோசமான  சேதாரங்களை ஏற்படுத்தும் எனவும், குறிப்பாக, குழந்தைகளை குறிவைத்து தாக்கும் எனவும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். இதற்கிடையில் கரும்பூஞ்சை, டெல்டா பிளஸ் என உருமாறிய கொரோனா நோய்த்தொற்று அபாயம் அச்சுறுத்தி வருகிறது.

இந்த புதிய வகை  நோய்த்தொற்றுகளில்  இருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி மட்டும்தான் ஒரே வழி என கூறப்படுகின்றது. ஆனால் நோய்த் தொற்று தாக்குதல் தொடங்கி 18 மாதங்கள் ஆகியும், பாஜக ஒன்றிய அரசு குடிமக்களுக்கு தடுப்பூசி மருத்து கொடுக்கவில்லை. கிடைக்கும் மருந்துகளை பகிர்ந்தளிப்பதில் விருப்பு, வெறுப்பு காட்டி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது.

முன் யோசனையும், போதிய முன் ஏற்பாடுகளும் இல்லாமல் திடீரென நாடு முடக்கம் செய்யப்பட்டதில் நாட்டின்  உற்பத்தி தடைபட்டது. சிறு, குறு, நடுத்தரக் தொழில்கள் கொன்றழிக்கப்பட்டன. கோடிக் கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். குறிப்பாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் படும்பாடு எழுத்தில் வடிக்க இயலாத அவலமாகும்.

இந்த நெருக்கடியான காலத்தில் மக்கள் துயரம் போக்கும் கோரிக்கைகளை முன்வைத்து இடதுசாரி கட்சிகள் ஜூன் 16 முதல் இருவார கால நாடு தழுவிய  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக தமிழ் நாட்டில் இடதுசாரி கட்சிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒருங்கிணைந்து நாளை 28.06.2021 தொடங்கி 29, 30  தேதிகளில் (செவ்வாய், புதன், வியாழன்) மூன்று நாட்கள் தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.

கோரிக்கைகள்:

·        கட்டுக்கு அடங்காமல் அதிகரித்து  வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை கட்டுப்படுத்தி,  2014 முதல் உயர்த்தப்பட்ட கலால் வரிகளை பெருமளவு குறைத்து, விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.

·        கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு  மருத்துகள் உட்பட உயிர் காக்கும் மருந்துகளின் கள்ள வணிகத்தை தடுத்து, நியாய விலையில்  மக்களுக்கு மருந்துகள்  தட்டுபாடின்றி கிடைப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்.

·        செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோ டெக் தடுப்பு மருந்துகள் உற்பத்தி வளாகத்தை தமிழ்நாடு அரசிடம் தாமதமின்றி வழங்க வேண்டும்.

·        தமிழ்நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப, போதுமான  தடுப்பூசி மருந்துகளும், பேரிடர் கால நிவாரண நிதியும் வழங்க வேண்டும்.

·        அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

·        தொழில் முடக்கம், வேலையிழப்பு. வேலையின்மை மற்றும் வருமானத்திற்கு வழியில்லாத காரணங்களால் வாழ்வாதரம் இழந்து நிற்கும் குடும்பங்களுக்கு மாதம் ரூபாய் 7500/- வீதம் அடுத்த ஆறு மாதங்களுக்கு வழங்க வேண்டும்.

·        மத்திய உணவுத் தொகுப்பில் இருந்து நபருக்கு தலா  10 கிலோ வீதம் உணவு தானியங்கள் விலையில்லாமல் வழங்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து இடதுசாரி கட்சிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒருங்கிணைந்து, மக்கள் உணர்வை பிரதிபலித்து நடத்தும் ஆர்பாட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்று, ஆதரிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →