மேட்டூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் தொடக்கம்
மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் இன்று காலை பத்மராஜன் மேட்டூர் சார் ஆட்சியரிடம் முதல் நபராக வேட்புமனு தாக்கல் செய்தார்.
சட்டமன்ற பொதுத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் இன்று துவங்கியது. மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் இன்று காலை பத்மராஜன் மேட்டூர் சார் ஆட்சியரிடம் முதல் நபராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர் 215-வது முறையாக தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் குஞ்சாண்டியூரில் வசிப்பவர் பத்மராஜன் (வயது 62). இவரது மனைவி ஸ்ரீஜா. இவர்களுக்கு ஸ்ரீஜேஷ் பத்மராஜன் என்ற மகன் உள்ளார். எட்டாம் வகுப்பு வரை படித்த இவர் பழைய லாரி பேருந்து டயர்களை புதுப்பிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
முதன்முதலாக 1988-ம் ஆண்டு மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
Advertisement
தொலைபேசி இணைப்பு வாங்குவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தார். அதன் பிறகு உலக சாதனை புத்தகமான கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்.
கூட்டுறவு சங்க தேர்தல் முதல் பிரதமர் தேர்தல் வரை வேட்பு மனு தாக்கல் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இன்று 215-வது முறையாக மேட்டூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
ஒரே சமயத்தில் 5 நாடாளுமன்ற தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தலில் போட்டியிடும் சுயேச்சைகளை கட்டுப்படுத்துவதற்காக தேர்தல் ஆணையம் டெபாசிட் தொகை பல மடங்கு அதிகரித்தது.
ஆனாலும் பத்மராஜன் தொடர்ந்து தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார். சில சமயங்களில் டெபாசிட் கட்ட பணமில்லாமல் தனது மனைவியின் நகைகளை அடகு வைத்து டெபாசிட் கட்டியதும் உண்டு.
அடிக்கடி இவர் தேர்தலில் போட்டியிடுவதால் இவருக்கு யாரேனும் பணம் கொடுத்து உதவுகிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்ய சில ஆண்டுகளுக்கு முன்பு வருமானவரித்துறை இவரது வீட்டை சோதனையிட்டனர்.
ஆனால் இவரது வீட்டில் இவரைப் பற்றிய செய்திகள் வந்த பத்திரிகைகள் புத்தகங்கள் மற்றும் பழைய டயர்களை தவிர எதுவும் இல்லாததால் வருமான வரித்துறை ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.