மானாமதுரை, இளையான்குடியில் அதிமுக வேட்பாளர் எஸ்.நாகராஜனுக்கு வரவேற்பு
அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தொகுதிக்கு வந்த எம்.எல்.ஏ எஸ்.நாகராஜனுக்கு மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனத்தில் அக்கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தொகுதிக்கு வந்த எம்.எல்.ஏ எஸ்.நாகராஜனுக்கு மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனத்தில் அக்கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
மானாமதுரை (தனி) தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக தற்போதைய இத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.நாகராஜன் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டு சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை மானாமதுரை வந்த எஸ்.நாகராஜனுக்கு அண்ணாசிலை அருகே அதிமுகவினர் திரண்டு சால்வைகள் அணிவித்து வரவேற்பளித்தனர்.
அதன்பின் நாகராஜன் அண்ணாசிலை அருகே வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சியினருடன் நகரில் ஊர்வலமாகச் சென்ற அவர் வைகையாற்றுப்பாலம் அருகேயள்ள சித்தி விநாயகர், ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்பு சுந்தரபுரம் வீதியில் தேவர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்தார். அதைத்தொடர்ந்து அவர் தொகுதியைச் சேர்ந்த இளையான்குடி பகுதிக்குச் சென்றார். அங்கு அவருக்கு அதிமுகவினர் வரவேற்பளித்தனர். அதன்பின் சாலைக்கிராமத்துக்குச் சென்ற நாகராஜனுக்கு கட்சியினர் சிறப்பான வரவேற்பளித்தனர். முன்னதாக தொகுதியின் எல்லை பகுதியான திருப்புவனத்தில் நாகராஜனை அதிமுகவினர் திரண்டு நின்று வரவேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சிகளில் அந்தந்த ஒன்றியங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.