'நான் என்ன தவறு செய்தேன்': தோப்பு வெங்கடாசலம் கண்ணீர்
ஈரோடு: பெருந்துறை தொகுதியில் மீண்டும் வாய்ப்பு வழங்காதது குறித்து தனது ஆதரவாளர்களுடன் பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் சனிக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.
ஈரோடு: பெருந்துறை தொகுதியில் மீண்டும் வாய்ப்பு வழங்காதது குறித்து தனது ஆதரவாளர்களுடன் பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் சனிக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம், 'நான் என்ன தவறு செய்தேன், எனக்கு சீட் வழங்காதது ஏன்' எனக் கூறியவாரே கண்ணீர் மல்க கதறி அழுதார். சிறிது நேரம் தொண்டர்களும் கதறி அழுதனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் பேசிய தோப்பு வெங்கடாசலம்,
"பெருந்துறை தொகுதியில் எனக்கு மீண்டும் சீட் வழங்கப்படாததற்கு "இன்டர்நெல் பாலிடிக்ஸ்" என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். நான் கட்சி, இயக்கம், பொதுமக்கள், தொகுதி மக்கள், முதல்வர், துணை முதல்வர் என அனைவருக்கும் விசுவாசமாக இருக்கிறேன்.
பெருந்துறை தொகுதியில் எனக்கு மீண்டும் சீட்டு வழங்காததற்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் பவானி எம்.எல்.ஏ.,வுமான கே.சி. கருப்பண்ணன்தான் காரணம்.
பெருந்துறை தொகுதிக்கு கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வருவதை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் தடுத்தார் என்பதற்காகத்தான் எனக்கும் அவருக்கும் விரோதம் இருந்தது தவிர தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை.
தற்போது பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் சீட் வழங்கப்பட்டுள்ளவர் பெருந்துறை தொகுதிக்கு கொண்டு வந்த கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை திட்டத்தை எதிர்ப்பவர்களிடம் கூட்டு சேர்த்து நீதிமன்றம் வரை வழக்கு தொடர்ந்தார்.
அதேபோல் பெருந்துறை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளருக்கு எதிராக மனுத்தாக்கல் செய்தவருக்கு தான் தற்போது சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பெருந்துறையில் 300 ஏக்கர் நிலம் முறைகேடாக பதிவு செய்து வீட்டு மனைகளாக பதிவு செய்துள்ளது தற்போதைய வேட்பாளர்தான்.
கடந்த 4 நாட்களாக பெருந்துறை தொகுதியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த பிரசாரத்திற்கு இதுவரை என்னையும் எனது ஆதரவாளர்களையும் அழைக்கவில்லை. இது மன வேதனை அளிக்கிறது. நான் மாற்றுக் கட்சியை சேர்ந்தவன் அல்ல.
இந்த நிலை என்னோடு போகட்டும் இனி எந்த அதிமுக தொண்டனுக்கும் இதுபோன்ற நிலை ஏற்படக் கூடாது. நான் என்ன தவறு செய்தேன், எனக்கு சீட் மறுக்கப்பட்டது எனத் தெரியவில்லை" என கண்ணீரோடு பேசினார் தோப்பு வெங்கடாசலம்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்,
"எனக்கு வாய்ப்பு வழங்காமல் இருந்தால்தான் அதிமுக ஆட்சிக்கு வரமுடியும் என அவர்கள் நினைத்திருந்தால் அதனை நான் முழு சம்மதத்துடன் ஏற்றுக் கொள்கிறேன். அதிமுக ஆட்சி அமைய வேண்டும்.
தலைமை மீது எந்த குற்றச்சாட்டும் நான் வைக்கவில்லை. எனது தொண்டர்கள் எனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கேட்கிறார்கள். பெருந்துறை தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய இதுவரை என்னை அழைக்கவில்லை.
தோப்பு வெங்கடாசலம் பிரசாரம் செய்துதான் பெருந்துறையில் வெற்றிபெற வேண்டும் என்ற அவசியம் இல்லை என அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார்.
இயக்கம் பெரிதா பதவி, பெரிதா என்றால் எனக்கு இயக்கம்தான் பெரிது. எனக்கு வாய்ப்பு வழங்காதது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளேன். இந்த இயக்கம் நல்ல பாதையில் செல்ல வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். தொண்டர்களின் விருப்பம்" என்றார்.