காரமடை புஜங்கனூர் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு கரோனா
மேட்டுப்பாளையம் அருகே காரமடை அடுத்த காளம்பாளையம் ஊராட்சியில் உள்ள தலைமை ஆசிரியருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் அருகே காரமடை அடுத்த காளம்பாளையம் ஊராட்சிக்குச் சொந்தமான புஜங்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தற்போது கரோனா பொது முடக்கம் காரணமாக 9, 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளிக்கு தினசரி 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வந்து கல்வி பயின்று செல்கின்றனர். தற்போது இப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து இவர் கோவை இ.எஸ்.ஐ அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 3 நாள்களுக்கு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தாளம் பாளையம் ஊராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காரமடை ஒன்றியத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement