கிழக்குச் சீமையிலே பட பாணியில் புதிய தொடர்!
கிழக்குச் சீமையிலே பட பாணியில் புதிய தொடர் எடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக...
கிழக்குச் சீமையிலே பட பாணியில் எடுக்கப்படும் புதிய தொடரின் மூலம் நடிகர் ரஞ்சித் மீண்டும் தொடரில் நடிக்கிறார்.
சின்ன திரையில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் தொடர்களைப் பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் உள்ளனர். வழக்கமாக அண்ணன் - தங்கை பாசப்பிணைப்பை மையப்படுத்தி பல தொடர்கள் எடுக்கப்பட்டு வருகிறது.
வழக்கத்திற்கு மாறாக, தாய் மாமன் உறவை மையப்படுத்தி விஜய் தொலைக்காட்சியில் புதிய தொடர் எடுக்கப்படுகிறது. இந்தத் தொடருக்கு தாய் மாமன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
Advertisement
தாய் மாமன் தொடர் விஜயகுமார் - ராதிகா நடித்திருந்த கிழக்குச் சீமையிலே படத்தின் பாணியில் எடுக்கப்படுகிறது. இதில் நடிகர் ரஞ்சித் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் சிந்துநதி பூ, மறுமலர்ச்சி, நட்புக்காக உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகர் ரஞ்சித். இவர், கவுண்டம்பாளையம், பீஷ்மர் உள்ளிட்ட படங்களை இயக்கியும் உள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே தொடரின் மூலம் நடிகர் ரஞ்சித் சின்ன திரையில் அறிமுகமானார். தொடர்ந்து பாக்கியலட்சுமி தொடரில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று 70 நாள்கள் வரை இருந்தார்.
இதனைத் தொடர்ந்து தாய் மாமன் தொடர் மூலம் சின்ன திரையில் மீண்டும் தோன்றுகிறார் நடிகர் ரஞ்சித். கிராமத்துப் பின்னணியில் எடுக்கப்படும் இந்தத் தொடரில் தாய் மாமன் பாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் இந்தத் தொடரில் தேவிப்பிரியா, ராஜ் கபூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மனோஜ் இயக்குகிறார். பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.
தாய் மாமன் தொடரின் முன்னோட்டக் காட்சி ரசிகர்கள் மத்தியில் வைராலாகியுள்ள நிலையில், ஒளிபரப்பு தேதி, நேரம் தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.