கடலூரில் எம்.சி. சம்பத் ஆதரவாளர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை
கடலுர் மாவட்டத்தில் அதிமுக பிரமுகர்கள் வீடுகளில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கடலுர் மாவட்டத்தில் அதிமுக பிரமுகர்கள் வீடுகளில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் அமைச்சர் எம்.சி. சம்பத் போட்டியிடுகிறார். வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்றும் நாளையும் கடலூர் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.
இந்நிலையில் அமைச்சரின் ஆதரவாளர்களாக அறியப்படுபவர்களில் 8 பேரின் வீடுகளில் இன்று மதியம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
கடலூர் மாவட்டம் சூரப்பன்நாயக்கன்சாவடியில் உள்ள அதிமுக பிரமுகர் மதியழகன் வீட்டுக்கு வந்த வருமான வரித்துறையினர், அங்கு தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். வீட்டிலிருந்து யாரும் வெளியே செல்லவும், வீட்டுக்குள் வெளிநபர்கள் உள்ளே வரவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுபோலவே, அமைச்சர் எம்.சி சம்பத்தின் மற்றொரு ஆதரவாளரான பாலகிருஷ்ணன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இவர்கள் உள்பட கடலூரில் அதிமுக நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், மகேஷ்வரிக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை மற்கொண்டு வருகின்றனர்.
எனினும், சோதனை குறித்த முழு தகவல்கள் வெளியிடப்படவில்லை.