நிர்பயா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்தாதது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி
நிர்பயா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்தாதது ஏன்? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: நிர்பயா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்தாதது ஏன்? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 2012-ஆம் ஆண்டு தில்லியில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான செலவினங்களுக்காக, நிர்பயா நிதியம் என்ற நிதியத்தை மத்திய அரசு உருவாக்கியது.இந்த நிதியத்துக்கு, ஆரம்பக் கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. இந்த நிதியம், அனைத்து மாநிலங்களுக்கும் நிதியை ஒதுக்கி வருகிறது.
நிர்பயா திட்டத்தின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.190 கோடியில் வெறும் ரூ.6 கோடி மட்டும் செலவழித்துள்ளது. எஞ்சியத் தொகையை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டது. இந்த நிதியை, 100 சதவீதம் செலவிடுவதை உறுதி செய்ய உயர் மட்டக் குழு அமைக்க கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் சூரியபிரகாசம் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிர்பயா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டு, இருப்பில் உள்ள நிதி எவ்வளவு? அந்த தொகை எப்படி செலவிடப்பட்டது? நிர்பயா நிதியை ஏன் முழுமையாக பயன்படுத்தவில்லை? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.பின்னர் இதுதொடர்பான விவரங்களை 4 வாரங்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.