மு.க.ஸ்டாலின் சீல் வைத்த பெட்டியை திறக்கவே முடியாது: கடலூரில் முதல்வர் பேச்சு
கடலூரில் வேட்பாளரான அமைச்சர் எம். சி.சம்பத்தை ஆதரித்து பிரசாரம் செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
கடலூர் மாவட்டத்தில் நேற்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தனது தேர்தல் பரப்புரையை காட்டுமன்னார் கோயிலில் தொடங்கினார். பின்னர், சிதம்பரத்தில் பிரசாரம் செய்து அங்கேயே இரவில் தங்கினார். இன்று காலையில் புவனகிரியில் வேட்பாளர் ஆ.அருண்மொழி தேவனை ஆதரித்தும், குறிஞ்சிப்பாடியில் வேட்பாளர் செல்வி ராமஜெயத்தை ஆதரித்தும் பரப்புரையில் ஈடுபட்டு பின்னர் கடலூரில் வேட்பாளரான அமைச்சர் எம். சி.சம்பத்தை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், இந்தத் தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடக்கும் தேர்தல். இதில் தர்மம்தான் வெல்லும். தர்மம், நீதி ஆகியவை அதிமுகவிடம் உள்ளது. எனவே, அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். ஸ்டாலின் தனது கூட்டங்களில் நாட்டு மக்கள் குறித்து பேசுவதும் இல்லை, சிந்திப்பதும் இல்லை. ஒவ்வொரு மக்களும் அரசியல் கட்சியினர் என்ன செய்வார்கள் என்று எதிர்பார்க்கையில் ஸ்டாலின் அரசையும் என்னையும் குறை மட்டுமே கூறி வருகிறார். அதிமுக ஆட்சியில் ஜாதி, மதக் கலவரங்கள் ஏற்படவில்லை.
தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து, ரௌடிசம் அதிகரிக்கும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஸ்டாலின் தான் சென்ற இடங்களில் எல்லாம் அருகிலேயே ஒரு பெட்டியை வைத்துக்கொள்கிறார். பெட்டி வாங்குவது அவரது பழக்க தோஷம் என்பதால் அதனை வைத்திருக்கிறார். அதில் பொதுமக்கள் போகும் மனுக்களுக்கு ஆட்சி அமைந்த பின்னர் நூறு நாட்களில் தீர்வு காணப்படும் என்று கூறுகிறார்.
ஆனால், அவர் அந்த பெட்டியை திறக்கப்போவதே இல்லை. ஏனெனில் அவர் முதல்வராக வர வாய்ப்பே இல்லை. 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாததால் திமுகவினர் பசியில் உள்ளனர். எனவே மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பண்ருட்டியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதன்பிறகு நெய்வேலியில் பாமக வேட்பாளர் கோ.ஜெகன், விருத்தாசலத்தில் பாமக வேட்பாளர் ஜெ.கார்த்திகேயனை ஆதரித்து மாலையில் பிரசாரம் செய்கிறார்.