சென்னை: அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அஹிம்சா சோசியலிஸ்ட் கட்சி நிறுவனத் தலைவர் ரமேஷ் தாக்கல் செய்துள்ள மனுவில், தேர்தல் நடத்தை விதிகள் ,தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வகுக்கப்பட்டவை. அதில், அமைச்சர்கள் தங்கள் அலுவல் சார்ந்த பணியுடன், தேர்தல் பணிகளை மேற்கொள்ளக் கூடாது எனவும், அரசு வாகனங்களை தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. அரசு பதவி வகிக்கும் அமைச்சர்கள், தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வது வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். தேர்தல் பிரசாரத்தின் போது, அமைச்சர்கள் தங்கள் அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்களா என கண்காணிக்க எந்த நடைமுறையும் இல்லை. அரசு ஊதியம் பெறும் அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய அனுமதிக்க கூடாது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியுள்ளேன். அந்த மனுவை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.