தேனி அருகே இளைஞர் மர்மச் சாவு: 2வது நாளாக உறவினர்கள் சாலை மறியல்
தேனி அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்ததில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்ததில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும் உறவினர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தேனி அருகே டொம்புச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன்(28). இவர் அடிக்கடி அருகே உள்ள கோழிப் பண்ணையில் எலக்ட்ரிஷனாக வேலை பார்த்து வந்தார். திங்கள்கிழமை பணியின்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பிரபாகரனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த அவரது உறவினர்கள் பிரபாகரனின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி மருத்துவமனை முன்பு தேனி மதுரை நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்ட உறவினர்கள் இவ்வழக்கு குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தும் முறை பிரபாகரனின் உடலை வாங்கப் போவதில்லை என தெரிவித்தனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மருத்துவமனைக்கு வந்திருந்த அவரது உறவினர்கள் மீண்டும் இரண்டாவது முறையாக தேனி மதுரை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த காவல்துறை தடுப்புகளைச் சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்தப்படும் என அவர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.