முகப்பு
தமிழ்நாடு

துறையூர் தனி தொகுதி தேர்தல் அலுவலரைக் கண்டித்து வணிகர்கள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் துறையூர் தனி தொகுதி தேர்தல் அலுவலரைக் கண்டித்து வட்டார அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
துறையூர் தனி தொகுதி தேர்தல் அலுவலரைக் கண்டித்து வணிகர்கள் சாலை மறியல்
பகிர்:

திருச்சி மாவட்டம் துறையூர் தனி தொகுதி தேர்தல் அலுவலரைக் கண்டித்து வட்டார அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

துறையூர் நுகர்பொருள் விற்பனை பிரதிநிதி செல்வகுமார் கிராமங்களில் உள்ள கடைகளில் நுகர்பொருள்கள் இறக்கிவிட்டு அதற்குரிய பணத்தை வசூல் செய்து ரூ.92,000 கையில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் நாகலாபுரம் வழியாக துறையூர் சென்று கொண்டிருந்தபோது துறையூர் தனித் தொகுதி தேர்தல் பறக்கும் படையினர் அவரது வாகனத்தைச் சோதனையிட்டனர். 

அப்போது செல்வகுமார் போதிய ஆவணம் எதுவும் இன்றி ரூ.92,000 கையில் வைத்திருந்தது தெரிந்தது. இதனை அடுத்து பறக்கும் படை அலுவலர் ஹரிச்சந்திர மகாராஜா செல்வகுமாரிடமிருந்து ரூ92,000 பணத்தை பறிமுதல் செய்து துறையூர் தேர்தல் நடத்தும் அலுவலர் டி. முத்துவடிவேலுவிடம் ஒப்படைத்தார். இந்த தகவல் அறிந்து நுகர்பொருள் விற்பனை முகவர் சீனிவாசன் மற்றும் துறையூர் வட்டார அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் துறையூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரை நேரில் சந்தித்து பறிமுதல் செய்த பணத்தைத் திரும்பத் தருமாறு கேட்டனர். 

அப்போது திருச்சி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் முறையிட்டு பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு துறையூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களிடம் பதில் கூறினார். இதுபோன்று கடைகளில் வசூல் செய்து வணிகர்கள் எடுத்து வரும் பணத்திற்கு என்னென்ன ஆவணங்கள் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்று வியாபாரிகள் கேட்டதற்கும், தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்திய உடன் ஏன் துறையூர் பகுதி வியாபாரிகளை அழைத்து பணம் எடுத்துச் செல்லும் போது வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் குறித்து வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஆலோசனை வழங்கவில்லை என்றும் கேட்டுள்ளனர். அதற்கு துறையூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சரியாகப் பதில் கூறவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து துறையூர் மளிகை வியாபாரிகள் சங்கம் மிட்டாய்க் கடை வியாபாரிகள் சங்கம் நுகர்பொருள் விற்பனை வினியோகஸ்தர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை துறையூரில் கடையடைப்பு செய்யப் போவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை திடீரென துறையூர் பேருந்து நிலையம் முன்பு வியாபாரிகள் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து வடிவேலுவைக் கண்டித்தும்,  பறிமுதல் செய்த பணம் ரூ.92000-த்தை சம்பந்தப்பட்ட வியாபாரியிடம் திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.