தினமணி.காம் செய்தி எதிரொலி: நூலகம் முன் குவிக்கப்பட்டிருந்த தேங்காய் சிரட்டைகள் அகற்றம்
தினமணி.காம் செய்தி எதிரொலியாக வாழப்பாடி நூலகம் முன் குவிக்கப்பட்டிருந்த தேங்காய் சிரட்டைகள் அகற்றம்ப்பட்டுள்ளன.
வாழப்பாடி: தினமணி.காம் செய்தி எதிரொலியாக வாழப்பாடி நூலகம் முன் குவிக்கப்பட்டிருந்த தேங்காய் சிரட்டைகள் அகற்றம்ப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 60 ஆண்டுகள் பழமையான கிளை நூலகம் இயங்கி வருகிறது. இந்த நூலகத்திற்கு முன்பாக, தனியார் வியாபாரத்திற்காக தேங்காய் சிரட்டைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
பல மாதங்களாக குவிந்து கிடக்கும் தேங்காய் சிரட்டையில் மழைநீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.
இதுமட்டுமின்றி நூலகத்திற்கு வாசகர்கள் சென்று வருவதற்கும் இடையூறு ஏற்பட்டது. எனவே தேங்காய் சிரட்டை குவியலை அகற்ற பேரூராட்சி நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நூலக வாசகர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து நேற்று புதன்கிழமை தினமணி டாட் காம் இணைய இதழில், படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து, தேங்காய் சிரட்டை குவியலை அப்புறப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
வாசகர்களின் கோரிக்கையை படத்துடன் செய்தியாக வெளியிட்ட தினமணி. காம் இணைய இதழுக்கும், தேங்காய் சிரட்டை குவியலை அப்புறப்படுத்திய பேரூராட்சி நிர்வாகத்திற்கும், நூலக வாசகர் வட்டம் சார்பில், வாசகர்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளனர்.