சென்னையில் இன்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ள முதல்வர் பழனிசாமி, அதிமுக ஆட்சி காலத்தில் தி.நகர் பகுதி சிங்கப்பூராக மாறியதாகக் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இன்று காலை 10 மணியளவில் சென்னை மயிலாப்பூரில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் அதிகளவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் குற்றங்கள் குறைந்துள்ளன. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.
பிறகு, தி.நகரில் அதிமுக வேட்பாளர் சத்யாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது முதல்வர் பேசுகையில், தி.நகர் தொகுதி அதிமுகவின் வெற்றிக் கோட்டை, அதிமுக ஆட்சி காலத்தில் தி.நகர், சிங்கப்பூராக மாறியுள்ளது என்று ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை சுட்டிக்காட்டிப் பேசினார்.
பிறகு, கோடம்பாக்கம், அசோக் நகர் உள்ளிட்டப் பகுதிகளிலும் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.